'புகை எம் வாழ்வுக்கு பகை' யாழில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி (PHOTOS)

'புகை எம் வாழ்வுக்கு பகை' யாழில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி (PHOTOS)
புகைத்தலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்த முடியுமென்பதை நோக்கமாகக் கொண்டு புகை எம் வாழ்வுக்கு பகை என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வுப் பேரணியொன்று யாழில் நடைபெற்றது. 
 
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக இன்று (21) காலை ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு பேரணி சுன்னாகம் பஸ் நிலையத்தை சென்றடைந்தது. 
 
பேரணி சென்ற வழிகளில் வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் புகைத்தலால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அது தொடர்பான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. 
 
இந்த விழிப்புணர்வுப் பேரணியில் வடமாகாண சுகாதார அமைச்சு, யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள், வலி.வடக்கு, வலி.தெற்கு பிரதேச செயலக மற்றும் பிரதேச சபைகள் போன்றவற்றின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் 
 
புகைத்தலால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் முகமாக தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட வர்த்தகர்கள் இன்றைய தினம் தமது வர்த்தக நிலையங்களில் புகைப் பொருட்களின் விற்பனையை நிறுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
எமது வீட்டை சிகரட் புகையிலிருந்து விடுதலையான வீடாக மாற்றுவோம் என சிவதொண்டர், சிவமங்கையர் அமைப்புகள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளன. 
 
இவ் அமைப்புக்கள் மேலும் தெரிவிக்கையில், 
 
ஆரோக்கியமான மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலான பொருட்களில் புகையிலையும் அதனோடு சார்ந்த பன்னாட்டுக் கம்பனிகளின் தயாரிப்புகளான பல்வேறு விதமான சிகரட்களும் விளங்குகின்றமை நாம் அனைவரும் அறிந்ததாகும். 
 
ஆனால், யாழ். குடாநாட்டு மக்கள் இதுவரை அறிந்திராத அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவெனில், இலங்கையின் 25 மாவட்டங்களில் 2013 யூலை மாதம் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, புகைப்பொருள் பாவனையில் யாழ்ப்பாண மாவட்டம் 42.9 வீதத்துடன் முன்னிலை வகிக்கின்றது. 
 
எனவே, இந்த அதிபாதக நிலமையிலிருந்து எமது இளம் சந்ததியை மீட்டெடுக்க வேண்டியது எங்கள் அனைவருடையதும் பெரும் பொறுப்பாகும். 
 
புகைத்தல் இலங்கையில் ஒவ்வொரு நாளும் 60 பேரை மரணிக்கச் செய்கிறது. ஆதலால் புகை எமக்கு பகை. 
 
புகை புகைப்பவர்களை பாலியல் பலவீனமடையச் செய்கிறது. எம் இனிய முகத்தை அவலட்சணப்படுத்துகின்றது. ஆதலால் புகை எமக்குப் பகை. 
 
மறைந்திருந்து சிகரட் புகைத்தாலும் பாலியல் பலவீனமும் புற்றுநோய்களும் ஏற்படும். எமது வீட்டை சிகரட் புகையிலிருந்து விடுதலையான வீடாக மாற்றுவோம். எமது வீட்டில் எவரும் சிகரட் புகைப்பதில்லை. எனவே நாம் சந்தோசமாக இருக்கிறோம். எனும் நிலையை உருவாக்குவோம். 
 
எங்கள் பணத்தைச் சூறையாடிக்கொண்டு எமது சகோதரர்களுக்கு புகைத்தல் பழக்கும் சில கம்பனிகளின் செயற்பாடுகளுக்கு இனியும் இடமளியாதிருப்போம். 
 
எவருக்கு என்ன ஆனாலும் அவர்களின் நோக்கம் பணம் சம்பாதிப்பதே எங்கள் தாய்மாரின் கர்ப்பத்திலிருக்கும் சிசுவின் சுவாசத்திற்கு புகையற்ற நல்ல காற்றை வழங்குவோம். 
 
இலங்கையில் வாய்ப்புற்றுநோய்க்கு பிரதான காரணமான வெற்றிலையுடன் புகையிலையை மெல்லும் பழக்கத்தை கைவிடுவோம். அத்தோடு கடைகளில் புகையிலை விற்பனை செய்வதையும் நிறுத்துவோம். 
 
சிகரட் கம்பனிகளின் பிடியிலிருந்து எமது எதிர்காலச் சந்ததியினராகிய சிறுவர்களைப் பாதுகாப்போம். 
 
சிகரட் நாற்றத்திலிருந்து விடுபட்டு எமது குழந்தைகளுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வழி சமைப்போம். புகைப்பவர்களே உங்கள் இனிய முகத்தை அவலட்சணமாக்கி, பாலியல் பலவீனமடையச் செய்யும் சிகரட் புகையிலிருந்து இனியாவது விடுதலைபெற முயற்சியுங்கள். 
 
எம் சகோதர சகோதரிகளே, நாம் இனியொரு விதி செய்வோம். எம் வாழ்வுக்குப் பகையான புகையை எம் பிரதேசத்திலிருந்து இல்லாதொழிக்க உறுதி பூணுவோம் என சிவதொண்டர், சிவமங்கையர் அமைப்புகள் மேலும் தெரிவித்தனர்.