நடிகை ஸ்ருதி நடித்துள்ள தெலுங்கு படத்தில் பிராமணர்களை கிண்டல் செய்யும் விதமாக காட்சியமைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ரவி தேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் ‘பலுபு´. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
அதில் பிராமணர்களுக்கு எதிரான காட்சியமைப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிராமணர் சங்கத்தினர், ‘கடந்த ஆண்டு எங்கள் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு எதிராக ஒரு படம் திரைக்கு வந்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில வெளியான பலுபு படத்தில் கடந்த ஆண்டு நாங்கள் நடத்திய நியாயமான போராட்டதை கிண்டல் செய்யும் விதமாக வசனங்கள் வைத்திருக்கின்றனர்.
இதற்கு தனிக்கை குழுவினர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சான்றிதழ் அளித்துள்ளனர். எங்கள் சமூகத்துக்கு எதிராக உள்ள வசனத்தை நீக்க வேண்டும் என்று தனிக்கை குழு, பிலிம்சேம்பர் மற்றும் ஆந்திர அரசுக்கு மனு அளித்திருக்கிறோம்‘ என்றார்.
இதற்கு பதில் அளித்த பட இயக்குனர் மலினேனி கோபிசந்த் கூறும்போது,
‘எந்த சமூகத்துக்கும் எதிராக படம் எடுக்கவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்ப்போம். படத்தை சங்கத்தினருக்கு திரையிட்டு காட்ட உள்ளோம்‘ என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில்தான் படத்தை தனியாக திரையிட்டுக் காட்ட வேண்டும் என்று பல அமைப்பினரும் போராட்டம் நடத்துவார்கள். இப்போது ஆந்திராவிலும் ஆரம்பித்துவிட்டார்களா? என கவலையில் உள்ளனராம் பட தயாரிப்பாளர்கள்.