அடுத்த கட்ட நகர்விற்கான வழி மாகாணசபை தேர்தல் - சிவாஜிலிங்கம்

என்றுமே சுதந்திர தமிழீழத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் யாழ். மாவட்ட வேட்பாளருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

நாம் ஒரு நாட்டின் கீழ் வாழ விரும்புகின்றோம். ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அல்ல. என்றுமே நாம் சுதந்திர தமிழீழத்தை கேட்கவில்லை. 

இந்த மாகாண சபைக்குள் இருந்து அடிபட்டு முட்டு பட்டு இதற்குள் ஒன்றுமில்லை என நாம் சர்வதேசத்திற்கு காட்டி அடுத்த நகர்வை மேற்கொள்ள வேண்டும். 

சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் அடுத்த கட்டம் செல்வதற்கான ஒரு வழியாகவே நாம் இந்த மாகாண சபையை பார்க்கின்றோம். 

தமிழீழம் என்பது வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அங்குள்ள ஆட்சி சுயாட்சியாக இருக்க போகின்றதா சமஷ்டி முறையா என்பதே தற்போதைய பிரச்சனை. 

தமிழர்கள் தம்மை தாமே ஆளுகின்ற தீர்வை நோக்கி நாம் தற்போது பயணிக்க தொடங்கியுள்ளோம். 

அதற்கு உயிரிழந்த போராளிகள் மக்களின் தியாகங்களே நாம் இன்று அவற்றை நோக்கி செல்ல வழி அமைத்து தந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.