அரியாலை கிழக்குப் பகுதியில் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் அமைத்துக் கொடுக்கப்படும் ஒரு தொகுதி வீடுகளின் கூரை வேலைகளின் தரம் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த வேலைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் (7) இடம்பெற்ற வீட்டுத்திட்ட பயனாளிகளுடனான சந்திப்பையடுத்தே அமைச்சர் இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.
அரியாலை கிழக்குப் பகுதியில் சொன்டா கிளப் - 01 என்ற அரச சார்பற்ற நிறுவனம் 16 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பொருட்டு ஏற்கனவே மூன்று வீடுகளை நிர்மாணித்து பயனாளிகளிடம் கையளித்துள்ளது.
ஏனைய 13 வீடுகளின் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த வீடுகளுக்கான கூரை வேலைகள் தென்னை மரத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவ்வேலைகள் குறித்து தமக்கு திருப்தியில்லாத நிலையில் தென்னை மரங்களுக்கு பதிலாக பனைமரத்தினால் கூரை வேலைகளை குறித்த நிறுவனத்தினூடாக பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்குமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.
இதனடிப்படையில் மக்களது கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர், குறித்த நிறுவனத்தின் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணக்கம் காணப்படும் வரையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துமாறு பணிப்புரை விடுத்ததுடன், இணக்கம் காணப்பட்டதன் பின்னர் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே இதுவரையில் நிறைவு செய்யப்பட்ட கட்டுமானப் பணிகளின் வேலைகள் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நல்லூர் பிரதேச செயலக தொழில்நுட்ப அதிகாரியிடம் அமைச்சர் கேட்டுக்கொண்;டார்.
அத்துடன் அந்தந்த பிரதேச செயலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்ட வேலைகள் உள்ளிட்ட எவ்விதமான வேலைத்திட்டங்களாக இருந்தாலும் அவற்றை கண்காணிக்க வேண்டியது பிரதேச செயலகங்களின் முக்கிய கடமையாகுமென்றும் சுட்டிக்காட்டினார்.
இவ்விடயம் தொடர்பாக அமைச்சர், குறித்த அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுடனும் மற்றும் ஒப்பந்தகாரர்களுடனும் கலந்துரையாடியதுடன் மேற்படி விடயம் தொடர்பில் விரைவில் கலந்துரையாடலொன்றைய மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.