ஆப்பிள் போன்கள் என நினைத்து ஆப்பிள் பழங்களை வாங்கிய பெண்

நவீன ரக ஆப்பிள் போன்கள் என்று நினைத்து ஆப்பிள் பழங்களை வாங்கி இளம்பெண் ஒருவர் ஏமாந்துள்ளார். 

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசிக்கும் 21 வயது இளம்பெண் தனக்கு 2 ஆப்பிள் ரக நவீன கைபேசிகள் தேவை என இணையம் மூலம் விளம்பரம் செய்தார். 

சில நாட்களில் அவரை இணையத்தில் தொடர்பு கொண்ட மற்றொரு பெண் தன்னிடம் புத்தம் புதிதாக ´2 ஆப்பிள்கள்´ இருப்பதாகவும் குறைந்த விலைக்கு விற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

குறிப்பிட்ட ஒரு நாளில் இருவரும் ஒரு உணவகத்தில் சந்தித்தனர். விளம்பரம் செய்த பெண்ணிடம் 1,200 அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொண்டு 2 புதிய கைபேசி பெட்டிகளை அளித்தார். 

மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்த அந்த இளம்பெண் பெட்டிகளை திறந்து பார்த்தபோது ஒவ்வொரு பெட்டியிலும் செக்கச்சிவந்த 2 ஆப்பிள் பழங்கள் இருப்பதை கண்டு திகைப்படைந்தார். 

இச்சம்பவம் தொடர்பாக பிரிஸ்பேன் பொலிசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இணையத்தில் பொருட்களை வாங்குபவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று குற்ற தடுப்பு காவலர் ஜெஸ் ஹாப்கின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.