யாழில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவினரிடம் எவ்வாறு கைக்குண்டுகள் வந்தது என்று கடந்த 7 மாதமாக விசாரணை நடத்தியும் எந்தவிதமான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற மாதாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்.
கடந்த தை மாதம் 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேர் கோப்பாய் மற்றும் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள் மற்றும் கைக்குண்டுகளும் மீட்கப்பட்டிருந்தது. எனினும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவர்களில் ஒருவரைத் தவிர ஏனையவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 7 மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் எந்தவிதமான தகவல்களையும் அவர் வழங்கவில்லை. இதனால் அந்த கைக்குண்டுகள் எங்கிருந்து வந்தது என்று இதுவரையில் பொலிஸாருக்கு தெரியவரவில்லை என்றார்.