இந்தியத் தலைவர்களுக்கு இராஜதந்திர பிரச்சினைகள் இருக்கலாம் - சரித்த ஹேரத்

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது ஒதுங்கியிருப்பதாக கூறவில்லை எனவும், அந்த நாட்டுத் தலைவர்களுக்கு சுகாதார பிரச்சினைகள் மற்றும் இராஜதந்திர பிரச்சினைகள் இருக்கலாம் எனவும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும் 36 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த முறை பேர்த்தில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் 54 நாடுகளில் 33 நாடுகள் மட்டுமே கலந்து கொண்டதாக சரித்த ஹேரத் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

1976ம் ஆண்டு இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டின் பின்னர், இலங்கையில் நடைபெறும் மிகப் பெரும் நிகழ்வு இதுவாகும் எனவும், இது தொடர்பான அறிக்கையிடலுக்காக 1000 ஊடகவியலாளர்கள் பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஹம்பாந்தோட்டையில் இன்று ஆரம்பமான பொதுநலவாய இளைஞர் மாநாட்டின்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.