இந்திய வீட்டுத்திட்டம்: கோப்பாயில் 247 குடும்பங்கள் தெரிவு

இந்திய வீட்டுத்திட்டம்: கோப்பாயில் 247 குடும்பங்கள் தெரிவு

'யாழ். கோப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 247 குடும்பங்கள் இந்திய வீட்டுத்திட்டம் பெறுவதற்காக முதல் கட்டமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்' என்று கோப்பாய் பிரதேச செயலர் மருதலிங்கம் பிரதீபன் புதன்கிழமை (19) தெரிவித்தார்.

தெரிவுசெய்யப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான செயன்முறை விளக்கக்கூட்டம் கோப்பாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (19) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதேச செயலர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, குடும்ப உறுப்பினர்களின் வயது, தங்கிவாழ்வோர் ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் 10 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 7 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 242 குடும்பங்கள் இத்திட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஊரெழுவில் 16 வீடுகளும் கோப்பாய் மத்தியில் 32 வீடுகளும் அச்செழுவில் 34 வீடுகளும் சிறுப்பிட்டி மேற்கில் 26 வீடுகளும் புத்தூர் மேற்கில் 20 வீடுகளும் புத்தூர் கிழக்கில் 84 வீடுகளும் அச்சுவேலி தெற்கில் 35 வீடுகளும் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

இந்த வீட்டுத்திட்டம் மீள்குடியேறிய மக்களுக்கே முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. 247 வீட்டுத்திட்ட பயனாளிகளில் 71 பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் முதல் கட்டப்பணமாக தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் வைப்பிலிடப்பட்டுள்ளது. 

அத்துடன், குறித்த பிரதேச செயலக பிரிவில் சுமார் 3000 குடும்பங்களுக்கு இன்னும் வீடுகள் தேவையாகவுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.