இந்தோனேசியாவில் காட்டுத் தீ : மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்

சுமத்ரா தீவில் காட்டு தீயினால் ஏற்பட்டுள்ள புகையானது மலேசியாவின் இரண்டு மாவட்டங்களை அதிக அளவில் சூழ்ந்துள்ளதால் அவசரசிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களுக்குள் இந்தோனேசியாவை சேர்ந்த சுமத்ரா தீவுகளில் பனை எண்ணெய் உற்பத்திக்கான வேளாண்மைக்காக நிலத்தை சுத்தம் செய்கின்றனர். 

இவ்வாறு செய்கின்றவர்கள் முறையான அரச அனுமதி பெற்று செய்யாமல் திருட்டுத்தனமாக இதில் ஈடுபடுவதால் அரசுக்கு பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. 

தற்போது சுமத்ரா தீவில் உள்ள ரியாவு மாகாணத்தில் எரியும் காட்டு தீயினால் ஏற்பட்டுள்ள புகையானது மலேசியாவின் இரண்டு மாவட்டங்களை அதிக அளவில் சூழ்ந்துள்ளது. 

மலேசியாவின் தெற்கு பகுதி மாநிலமான ஜோஹோரில் உள்ள முவர் மற்றும் லெடங் மாவட்டங்களில் காற்றில் உள்ள மாசின் அளவு 750 என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

பொதுவாக 300 என்ற அளவினைத் தாண்டினாலே அது ஆபத்தான நிலைமை என்று அறிவிக்கப்படும். 

இதனால் பிரதமர் நஜிப் ரசாக் இந்த இரு மாவட்டங்களிலும் உடனடியாக அவசர நிலையை அறிவிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார் என்று மலேசியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார். 

ஆயினும் இதுகுறித்து கருத்து அறிய பிரதமரையோ, அமைச்சரையோ தொடர்பு கொள்ள முடியவில்லை. 

அண்டை நாடான சிங்கப்பூரிலும் இந்தப் புகையின் தாக்கம் இருக்கிறது. ஆனால், தற்போது அங்கு மாசின் அளவு குறைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோஹோர் மாநிலத்தின் செயல் அதிகாரிகள், தேசிய பாதுகாப்புக் குழுவின் உத்தரவிற்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில் பொதுமக்களை தங்களின் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாட்டில் உள்ள பனை எண்ணெய் முதலீட்டு நிறுவனங்கள் மீது இந்தோனேசியா குற்றம் சுமத்தியுள்ளது. 

ஆயினும், குற்றம் சுமத்தப்பட்டுள்ள மலேசியாவின் சிமெதர்பியும், சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் குழுவும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளன.