இறுதி யுத்தத்தின்போது ஐ.நா பணியாளர்களை வெளியேற்றியது தவறு: ஹிட்டோக்கி டென்

'யுத்தம் நடைபெற்ற காலத்தில் எமது பணியாளர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றியது தவறு. அதற்காக தாம் வருந்துகிறோம். இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளை விடமாட்டோம்' என்று ஐ.நாவின் தெற்காசிய மற்றும் பசுபிக் நாடுகளுக்கான சிரேஸ்ட அரசியல் அதிகாரி ஹிட்டோக்கி டென் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தின் அரசியல் நிலமைகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து அறிவதற்காக யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜ.நாவின் ஆசிய மற்றும் பசுபிக் அரசியல் விவகார குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இன்று யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்யாமல் ஐ.நா தனது பணியாளர்களை வன்னியில் இருந்து வெளியேற்றியதற்கு ஆயர் தனது வருத்தத்தை இதன்போது தெரிவித்தார்.
 
அதற்கு பதிலளித்த ஹிட்டோக்கி டென், 'இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளை விடமாட்டோம்“என்று கூறியதுடன் “வன்னியில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் பற்றி ஏதோ ஒரு வகையில் தாங்கள் அறிவதாகவும் “குறிப்பிட்டார். 

அத்துடன், '2013ஆம் ஆண்டு இலங்கையில் நல்லிணக்கம் எற்பட்டு நிரந்தர சமாதானம் மற்றும் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் இதற்காக அனைவரும் முயற்சிகயை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, '2013ஆம் ஆண்டில், இலங்கை நல்லதொரு பொருளாதார நிலமைக்குத் திரும்பும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.