இலங்கையிடமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொள்ள முடியும்: ஆர்.கே.மதுர்

இலங்கையிடமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொள்ள முடியும்: ஆர்.கே.மதுர்
இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே.மதுர் (Mathur), இன்றைய தினம் காலை கண்டியிலுள்ள ஜனாதிபதியின் வதிவிடத்தில் ஜனாதிபதியை சந்தித்தார். 
 
இரண்டு தெற்காசிய அயலவர்களும் பகிர்ந்துவரும் பலமான நட்பில் இலங்கை - இந்தியாவிற்கிடையிலான பாதுகாப்புத்துறைக்கான கூட்டுறவு ஒரு முக்கியமான அம்சம் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ச்சியாகப் பேணி வந்துள்ளார். 
 
இந்தச் சந்திப்பில் கவனஞ்செலுத்தப்பட்ட பல்வகைப்பட்ட விடயங்களில், இரு நாடுகளின் பல்வேறு இராணுவப் பிரிவுகளுக்கிடையிலான பயிற்சிகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பாதுகாப்புச் செயலாளரும் கலந்துரையாடினர். 
 
இந்தியாவில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி அனுபவங்கள் சிறப்பான முறையில் அமைந்திருந்ததாக ஜனாதிபதியிடம் மதுர் தெரிவித்தார். 
 
"இலங்கையிடமிருந்து ஏராளமான பல விடயங்களை நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகின்றோம்" என மதுர் மேலும் தெரிவித்தார். 
 
தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மேலதிகமாக, இரு நாடுகளிலுமுள்ள பாதுகாப்புப் பயிற்சி நிறுவனங்களில் வருகை விரிவுரையாளர்களையும், நீண்டகால பயிற்சியாளர்களையும் பரிமாற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை இலங்கையும் இந்தியாவும் ஆராயுமென எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்தியாவின் ஆழ்கடல் மீன்பிடி காரணமாக இலங்கை மீனவர்களால், பிரதானமாக வடக்கு மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டார். 
 
"சுற்றுச்சூழலின் அழிவு என்பது மிகப்பெரிய பிரச்சினை" என ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார். 
 
"ஆழ்கடல் மீன்பிடியை நாங்கள் தடைசெய்துள்ளோம்". ஆழ்கடல் மீன்பிடி நடைமுறை தொடருமானால் இலங்கை, இந்தியா இரண்டிலுமிருந்து மீன் வளங்கள் முழுமையாக அழிந்துபோகும் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ, இலங்கையின் வடக்குப் பகுதியிலுள்ள தமிழ் மீனவர்கள் இதன்காரணமாக அதிகம் பாதிக்கப்படுவர் எனச் சுட்டிக்காட்டினார். 
 
அதிகாரிகள், பாதிக்கப்பட்ட தரப்புக்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தீர்வொன்றைக் கொண்டுவர உதவும் என இரண்டு தரப்பினரும் நம்பிக்கை வெளியிட்டனர். 
 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற 2ஆவது வருடாந்த பாதுகாப்புப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதற்காக மதுர், இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இரண்டு தேசங்களும் பங்குபற்றும் பல்வேறு பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளில் இதுவும் ஒன்றாகும். 
 
இலங்கை, இந்திய கரையோரப் பாதுகாப்புப் படைகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மட்டத்தில் ஏற்கெனவே பயனுள்ள பணியாற்றும் உறவு காணப்படுவது அவதானிக்கப்பட்ட பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 
 
இரண்டு நாடுகளும் பங்குபற்றியுள்ள பல்வேறு பாதுகாப்புச் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்குமிடையே ஏற்கெனவே காணப்படும் தொடர்புகளை மேலும் பலப்படுத்த உதவும் என ஜனாதிபதியும் இந்திய பாதுகாப்புச் செயலாளரும் ஏற்றுக் கொண்டனர்.
 
இன்றைய சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் ராம் சுஹக் சிங் (Ram Suhag Singh), இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் திருமதி சுசித்திரா துரை (Suchitra Durai) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
இலங்கை தரப்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுகா செனவிரத்ன, இலங்கைக் கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.