இலங்கை தம்பதிகள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வாழ்வுரிமை கட்சி பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டன் வாழ் இலங்கை தம்பதி தவராஜா- சலஜா. இவர்கள் கடந்த 29ஆம் திகதி விமானத்தில் சென்னை வந்தனர். இருவரையும் விமான நிலையத்தில் இருந்து ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. ரூ.2 கோடி கேட்டு லண்டனில் இருக்கும் தவராஜா மகள் தர்ஷினியிடம் கடத்தல் கும்பல் மிரட்டியது.
சென்னை பொலிசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கடலூர் அடுத்த மந்தார குப்பத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த இலங்கை தம்பதியை மீட்டனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியர் இந்திரா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
லண்டனில் உள்ள தவராஜாவின் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த அஜந்தனை லண்டன் பொலிசார் கைது செய்தனர். இவர்தான் கடத்தல் கும்பலுக்கு இலங்கை தம்பதியின் படங்கள், பயண விவரம் பற்றி இ-மெயில் அனுப்பி உள்ளார். இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக கடலூர் மந்தார குப்பத்தை சேர்ந்த சத்யா என்பவர் சேர்க்கப்பட்டார்.
இவர் கடத்தலுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்து உள்ளார். அவரை அண்ணாநகர் உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியம் மற்றும் பொலிசார் கடலூரில் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதான சத்யா தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் ஆவார். பா.ம.க.வில் இருந்து பிரிந்து சென்ற வேல்முருகன் ஆரம்பித்த அக்கட்சியில் சத்யா பணியாற்றி வந்து உள்ளார்.
சத்யா பா.ம.க.வில் இருந்தபோது பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார்.
இலங்கை தம்பதி கடத்தல் தொடர்பில் வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கைது
