இளைஞர் குழுக்களுக்கிடையே மோதல் சமாதானத்தை ஏற்படுத்த கலந்துரையாடர்

கரவெட்டி துன்னாலை தாமரைக்குளத்தடியில் நேற்று இடம் பெற்ற இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதல் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிய நிலையில் இன்று அக்குழுக்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
 
சரஸ்வதி பூசை நிகழ்வில் ஏற்பட்ட சிறுமோதல் பெரும் மோதலாக நேற்று இப்பகுதியில் இடம்பெற்றது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான ஆண், பெண் இருபாலாரும் வாள் பொல்லுகள் சகிதம் மோதலில் ஈடுபட்டதுடன் பல காயமடைந்தும் உள்ளனர்.
 
நிலைமையை நெல்லியடி பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினரின் உதவியை நாடியதுடன் பிரதேச செயலாளரும் அங்கு மோதல் சம்பவத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன் நேற்று மாலை மோதல்கள் தணிந்த நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இப் பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
 
இதனைத் தொடர்ந்து இரு குழுக்களுக்கிடையிலும் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் இன்று காலை 9 மணிக்கு நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட அனைவருக்குமான கலந்துரையாடலை பொலிஸார் ஒழுங்குசெய்துள்ளனர். இதில் பிரதேச செயலாளரும் கலந்துகொண்டு இப்பகுதியில் சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.