உரம் கலந்த பனை வெல்லம் வழக்கு, நாளை விசாரணை

உரம் கலந்த பனை வெல்லம் வழக்கு, நாளை விசாரணை

மனித பாவனைக்கு உதவாத, விவசாய பயிர்ச்செய்கைக்குப் பாயன்படுத்தப்படும் பொஸ்பேர் உரத்தைப் பயன்படுத்தி பனைவெல்ல உற்பத்தி செய்யப்பட்டமைக்கு எதிரான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

ஊர்காவற்றுறை பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால், கடந்த 13ஆம் திகதி ஊர்காவற்றுறை பனை தென்னை வளக்கூட்டுத்தாபனத்தின் பனைவெல்ல உற்பத்தி நிலையத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது, பொஸ்பேர் உரம் பயன்படுத்தி பனவெல்லம் உற்பத்தி செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து, ஊர்காவற்றுறை பொதுச்சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

மேற்படி வழக்கு கடந்த 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பனைவெல்ல உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 125 கிலேக்கிராம் பொஸ்பேர் உரத்தையும், அவ்வுரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட 114 கிலேக்கிராம் பனைவெல்லத்தையும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நீதிமன்றத்தில் பாரப்படுத்தினார்.

இதன்போது, ஊர்காவற்றுறை பனை தென்னை வளக்கூட்டுத்தாபனத்தின் சார்பில் வாதாடிய சட்டத்தரணி, மேற்படி செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக செப்டெம்பர் 1ஆம் திகதி வரை கால அவகாசம் கோரியிருந்தார்.

இதனையடுத்து, மேற்படி வழக்கு நாளை திங்கட்கிழமை (01) வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.