உலகம் முழுக்க 40 சதவீதம் பெண்கள் சித்திரவதைக்குள்ளாகின்றனராம்

உலகம் முழுவதும் மூன்றில் ஒரு பெண் முன்னாள் காதலன், கணவன், நண்பர்களால் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் சார்பில் மிகப்பெரிய அளவில் ஆய்வும், கருத்துக் கணிப்பும் நடைபெற்றது. 

இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. கடந்த 1983ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை குடும்பங்களில் வன்முறை என்ற தலைப்பில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. 

உலகம் முழுவதும் சுமார் 600 மில்லியன் பெண்கள் உள்ளனர். 86 நாடுகளில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட வளர் இளம் பெண்கள், 56 நாடுகளை சேர்ந்த பெண்களிடம் குடும்ப உறவில் செக்ஸ் கொடுமை குறித்து சர்வேயில் கேள்விகள் கேட்கப்பட்டன. 

இதுகுறித்து உலக சுகாதார நிறுவன இயக்குனர் மார்கரெட் சான் கூறியதாவது, 

உலகம் முழுவதும் உள்ள 40 சதவீதம் பெண்கள், பல்வேறு கொடுமைகள், சித்ரவதைகளுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர் அல்லது கொலை செய்யப்படுகின்றனர். 

உலக அளவில் கணவனின் கொடுமைகளுக்கு 30 சதவீதம் பெண்களும், சட்டத்துக்கு புறம்பாக உறவு வைத்துக் கொள்ளும் பெண்களில் 7 சதவீதம் பேரும் இத்தகைய பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாகின்றனர். 

பெண்களை அடிப்பது, கன்னத்தில் அறைவது, ஆயுதங்களால் தாக்குவது, விருப்பத்துக்கு மாறாக செக்ஸ் வைத்து கொள்ள கட்டாயப்படுத்துவது உள்பட பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் அதிகமாக துன்புறுத்தப்படுகின்றனர். 

மிகவும் நம்பகமாக உள்ள அவர்களது கணவன், காதலன் அல்லது கூட்டாளிகளே அவர்களை பல்வேறு காரணங்களுக்காக கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 

தொற்று நோய் போல இப்பிரச்சினை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. 

குடும்ப சிக்கலில் பெண்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கால கட்டத்தில் ஆண்களால் குறிப்பாக கணவனால் அல்லது காதலரால் நிச்சயம் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். 

இதை பெண்கள் பெரிதாக எடுத்து கொள்வதில்லை அல்லது வெளியில் சொல்வதில்லை. இத்தகைய கொடுமைகள் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 37 சதவிகிதம் நடைபெறுகிறது. 

இலத்தீன் மற்றும் தென் அமெரிக்காவில் 30 சதவீதம், வட அமெரிக்காவில் 23 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். ஐரோப்பா மற்றும் ஆசியாவில் 25 சதவிகிகிதம் பெண்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர். 

85 சதவிகித பெண்குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். கள்ளக்காதல் மற்றும் பல்வேறு சந்தேகங்களால் பெண்கள் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. 

இத்தகைய செயல்களை போதிய விழிப்புணர்வுகள் மூலம் உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்கரெட் கூறினார்