இலங்கையில் கடந்த ஆறு மாதகாலத்தில் கண்டறியப்பட்டுள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் நூற்றிற்கு 25 சதவீதமானவர்கள் 25 வயதிலும் குறைந்த இளைஞர், யுவதிகள் எனக் கண்டறியப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பால்வினை நோய்கள் தொடர்பான தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சிசிர லியனகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இளைஞர், யுவதிகளை மேற்படி பால்வினை நோய்களில் ஒன்றான எச்.ஐ.வி. தொற்று வெகுவாகப் பாதிப்புச் செலுத்தியுள்ளது. இதுவரை 1950 எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ள போதும் 3000 முதல் 5000 பேர் வரை இருக்க முடியும் என ஊகிக்கப்பட்டுள்ளது. அனேகருக்கு தாம் எச்.ஐ.வி.தொற்று உள்ளனவர்கள் என்பது தெரியாதுள்ளது.
கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ம் திகதி வரை எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள் என 110 பேர் இனம் காணப்பட்டுள்ள போதும் அவர்களில் 25 சதவீதமானவர்கள் 15 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் தெரிய வருகிறது.
அத்துடன் இக்காலப் பகுதியில் ஒன்பது பேர் உயிரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.