கறுப்பின போராளி மண்டேலாவின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி மஹிந்தவும் பங்கேற்பார்?

20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தவரும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த 5ஆம் திகதி இரவு காலமான நெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்வு வரும் 15ம் திகதி அவர் பிறந்து வளர்ந்த மலைப்பகுதி கிராமமான கியூணு என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது. 

இந்த நிகழ்வில் பங்கேற்க வரலாறு காணாத வகையில் உலகத் தலைவர்கள் தென்னாபிரிக்காவுக்கு படையெடுக்கவுள்ளனர். 

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் ஜனாதிபதிகள், புஷ், கிளின்டன், மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தென்னாபிரிக்கா செல்லத் தயாராகி வருகின்றனர். 

இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.