தமிழர் வாழ் இடங்களில் இந்து ஆலயங்களை அழிக்கும் நடவடிக்கையில் மதவாதிகள் ஈடுபட்டுள்ளார்கள் கிளிநொச்சி குளக்கட்டுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஞான வைரவர் கோயில் நேற்று இரவு விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் பழமை வாய்ந்த கோயிலாகும். போருக்கு பின்னர் பலத்த சேதம் அடைந்த இக்கோயில் புனரமைக்கப்படாமல் தற்காலிகக் கொட்டகையிலேயே வழிபாடு நடாத்தப்பட்டு வந்தது.
இரு வருடங்களாக இக்கோயில் வளாகத்தில் இராணுவத்தினர் குடி கொண்டிருந்தனர். இங்கு முருகையா கணேசன் என்பவர் இப்பகுதிச் சந்திக்கு அருகாமையில் குடியிருந்து சண்டித்தனங்களிலும் வீண் வம்புச்சேட்டைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இராணுவத்திற்கு கஞ்சா விநியோகிப்பதே இவரது தொழில். கோயிலுக்கான எந்த அபிவிருத்தி வேலைகளையும் செய்வதற்கு இவர் அனுமதிப்பதில்லை. கடந்த வருடம் ஆலய புனரமைப்பில் ஈடுபட்ட முருகவேல் என்பவரைத் தாக்கிய போதும் பொலிசார் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதன் தொடர்ச்சியாகவே கடந்த சில நாட்களாக இவரது அடாவடித்தனம் மேலோங்கியிருந்து. இரண்டு டிப்பர் கருங்கல்லைக் கொண்டு வந்து வீதிக்கு குறுக்கே கொட்டி பாதையைத் தடை செய்து வீதிப் போக்குவரத்துக்கு பங்கம் ஏற்படுத்தியிருந்தார்.
இதனைக்கண்டித்து மருதநகர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் பொலிஸின் உதவியுடன் வீதித் தடையையும் நீக்கியிருந்தனர். இதன் பின்னரே கோயில் தீக்கிரையாக்கப்பட்டது.
குறித்தவருக்கு உடந்தையாக இப்பகுதியைச் சேர்ந்த ஈ.பி.டி.பி உறுப்பினரும் சமுர்த்தி உத்தியோகத்தருமான கணேஷ் தர்மலிங்கம் (தனுஷன்) என்பவரும் செயற்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் இக்கோயில் புனரமைக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே இச்சம்பவமும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இது தொடர்பாக பொலிசார் எதுவித நடவடிக்கையும் எடுக்காதிருப்பது கேள்விக்குறியாக உள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.