ஜெனீவாவுக்கு சென்றுள்ள தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்குத் தேவையான ஒரு கல்லைக் கூட
பெற்றுக்கொடுத்தார்களா என்பதை ஜெனீவாவில் விளங்கப்படுத்த முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றியே தீருவோம் என்றும் சூளுரைத்தார்.
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அடம்பன் கிராமத்தில் 300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட குடி நீர் விநியோகத் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் இங்கு தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது;
கடந்த 20 வருடங்களாக இலங்கையில் வாழும் மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளினால் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.அந்த நிலையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாற்றியமைத்து சகலரும் அனுபவிக்கக் கூடிய சமாதானத்தை ஏற்படுத்தித் தந்துள்ளார்.அதனை குறிப்பாக வடமாகாண மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படுகின்ற நிதிகளில் அதிகமானவை வடமாகாணத்தின் அபிவிருத்திக்கே செலவிடப்படுகின்றன.முற்றாக வடக்கில் புலிகளினால் அழித்து துவம்சம் செய்யப்பட்ட பல கட்டிடங்களை மீள் புனரமைத்துள்ளோம்.
பாதைகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. மதவாச்சி தலை மன்னார் புகையிரதப் பாதை நிர்மாணப் பணிகள் வேகமாக இடம் பெறுகின்றன.அதேபோல் புத்தளம் மன்னார் ஊடான யாழ்ப்பாண பாதைகள் அமைக்கப்பட்டுவருகின்றன.நவீன வைத்தியசாலைகள்,பிரதேச செயலகக்கட்டிடங்கள் மற்றும் தேவையான பாடசாலைக் கட்டிடங்கள் என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.இவைகளெல்லாம் இங்கு வாழும் மக்களுக்காகவே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையில் 80 சதவீதமாக வாழும் பௌத்தர்கள் வழிபடும் தலதா மாளிகையின் நிர்மாணத்துக்கு கூட வழங்ககப்படாத நிதிகள் மடு தேவாலய புனரமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை உலகிலுள்ள கத்தோலிக்க மக்களது பிரதான வணக்கத் தலமாக மாற்ற வேண்டும் என்பது தான் எமது பிரதான நோக்கமாகும்.அதே போன்று தமிழ் மக்களது பிரசித்தம் பெற்ற 5 திருத்தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயில் புனரமைப்புக்கு என 350 கோடி ரூபாய் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவைகளெல்லாம் இப்பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் தேவைகளாகவுள்ளன.இவ்வாறு எம்மால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை தடுப்பதற்கும்,மக்கள் அதனை அனுபவிக்க கூடாது என்ற நோக்கத்தோடு சர்வதேச புலம் பெயர் சமூகத்திடம்,நாடுகளிடமும் சென்று தமிழ் கூட்டமைப்பு பிழையான தகவல்களை வழங்கி வருகின்றது.