கொக்கெய்ன்னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய பெண்ணுக்கு தண்டனை குறைப்பு

பிரேசிலில் இருந்து துபாய் வழியாக தென்னாபிரிக்காவுக்கு கொக்கெய்ன் கடத்த முயன்ற 24 வயது தென்னாபிரிக்க பெண்ணை கடந்த ஜனவரி மாதம் துபாய் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

அந்த பெண் நடந்து வந்த விதத்தை பார்த்து சந்தேகப்பட்ட பெண் அதிகாரிகள் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை கழற்றி பரிசோதித்தனர். 

அப்போது, கால்சட்டையின் உள்ளே அணிந்திருந்த உள்ளாடையுடன் ஒரு பையை அந்த பெண் இணைத்து தைத்திருந்தது தெரியவந்தது. அந்த பையை கழற்றி பார்த்தபோது உள்ளே 3 1/2 கிலோ எடையுள்ள கொக்கெய்ன் என்ற போதைப் பொருள் பிடிப்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கில் துபாய் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு கடந்த மே மாதத்தில் 15 ஆண்டு சிறை தண்டனையும், 2 இலட்சம் திர்ஹம் அபராதமும் விதித்தது. 

பிரேசில் நாட்டை சேர்ந்த போதை மருந்து மாஃபியாக்கள் என்னை கொன்று விடுவதாக மிரட்டியதால் இந்த தவறை செய்து விட்டேன். எனது தண்டனையை குறைக்க வேண்டும் என்று அந்த பெண் துபாய் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஈசா அல் ஷரீப் 15 ஆண்டு கால தண்டனையை 10 ஆண்டுகளாகவும், 2 இலட்சம் திர்ஹம் அபராதத்தை 50 ஆயிரம் திர்ஹம் ஆகவும் குறைத்து தீர்ப்பளித்தார்.