சமாதானத்தை விரும்பாதவர்களே யுத்த குற்றச்சாட்டுகளை முன்வைக்க முயற்சிக்கின்றனர் – ஜனாதிபதி

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. சமாதானத்தை தெற்கு மக்கள் மட்டுமல்ல வடக்கு மக்களும் அனுபவித்துகொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முயற்சிக்கின்றனர். அவ்வாறு முயற்சிப்போர் சமாதானத்தை விரும்பாதவர்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

1622094_10151836817446467_1011350602_n

66ஆவது சுதந்திரதினத்தின் பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வைபவம் கேகாலை சுதந்திர மாவத்தையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. சுதந்திரதினத்தின் பிரதான வைபவம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அந்த மாவத்தையை ஜானதிபதி திறந்து வைத்தார்.

அதிதிகள் வருகையை அடுத்து குதிரைப்படை சகிதம் முப்படைகளின தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ பிரதான மேடையை வந்தடைந்தார். அவரை பிரதமர் தி.மு.ஜயரத்ன தலைமையிலான குழுவினர் வரவேற்று பிரதான மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

அதனையடுத்து ஜனாதிபதியின் வருகையை அறிவிக்கும் சங்கொலி இசைக்கப்பட்டது. பின்னர் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியை தேசியக்கொடி கம்பத்திற்கு அருகில் அழைத்ச்து சென்றனர்.

கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இனங்களையும் சேர்ந்த 110 மாணவிகள் தேசிய கீதமிசைக்க தேசியக்கொடியை ஏற்றிவைத்ததுடன், உயிரிழந்த முப்படையினருக்கும் தேசபிமானிகளுக்கும் இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டன.

அவர் அங்கு நாட்டு மக்களுக்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“வரலாற்று புகழ்மிக்க கேகாலையில் 66ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடுவதையிட்டு பெருமையடைகின்றோம். நாடு அபிவிருத்தி பாதையில் முன்னேறிக்கொண்டிருகின்றது. இவற்றுக்கெல்லாம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமையே முக்கியமான காரணமாகும்.

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரே வடக்கு மக்கள் சுதந்திரத்தை அனுபவித்துவருகின்றனர். அன்றிலிருந்து இன்றுவரையிலும் ஒரு குண்டுகூட வெடிக்கவில்லை. அவ்வாறு சுதந்திரத்தை வடக்கு மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்கள் மனித உரிமை, ஜனநாயகம் ஆகியவற்றை முன்னிறுத்திக்கொண்டே நாட்டுக்குள் வருகின்றனர்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமையின் கடினத்தை பலமிக்க நாடுகள் புரிந்துகொள்ளவேண்டும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட நான்கு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை நாட்டிலிருந்து அபகரிப்பதற்கு இடமளிக்கமாட்டேன். சமாதானத்தை பறிப்பதற்கு யாருக்கும் இடமளிக்கமாட்டேன். எம்மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

வடக்கு உள்ளிட்ட நாட்டு மக்கள் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், வடக்கு மக்களை கேடயங்களாக பயன்படுத்துவதற்கு மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயற்சிக்கின்றன. மக்களை காப்பாற்றுவதற்கும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் என்றுதான் இவர்கள் கூறிக்கொண்டிருக்கின்றனர். இது அவர்களுடைய நிகழ்ச்சி நிரலாகும்.

வடக்கு மக்கள் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றர். அதனை அபகரிப்பதற்கு யாரும் முயற்சிக்கக்கூடாது. அதற்கு இடமளியேன்.புலிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். ஆயுதங்களை ஏந்தியிருந்த சிறுவர்கள் இன்று பாடசாலைக்கு செல்கின்றனர்.

நீலம், பச்சை, சிவப்பு நிறங்கள் அல்லது தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களிடத்தில் இந்த நாட்டில் போட்டியில்லை. நாட்டின் மீது அன்பு செலுத்துபவர்களுக்கும் செலுத்தாதவர்களுக்கும் இடையிலேயே போட்டி நிலவுகின்றது.

கூண்டில் அடைத்துவைத்திருக்கின்ற புலிக்கு கூட அதன் கூண்டுக்குள் சுதந்திராமாக சுற்றி திரிவதற்கு இடமளிக்கவேண்டும். அந்த வகையில் எம்மக்களின் சுதந்திரத்திற்குள் தலையிடுவதற்கு நான் இடமளியேன்” என்றார்.