புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை குறித்த படங்கள் மூலமான எச்சரிக்கைகளை சிகரெட் பக்கெற்றுகளில் பொறிக்கும் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் அறிமுகமாகும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உலக சுகாதார அமைப்புகளின் புகையிலை கட்டுப்பாடு தொடர்பான கட்டமைப்பு மாநாட்டு ஆவணத்தில் முதலில் கையெழுத்திட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இதில் கையெழுத்திட்ட நாடுகள் மேற்படி பட எச்சரிக்கைகளை சிகரெட் பக்கெற்றுகளில் பொறிக்கும் திட்டத்தை மூன்று வருடங்களுக்குள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இலங்கை 2003 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டது.
எனினும், புகைப்பட எச்சரிக்கைகள் குறித்த கலந்துரையாடல்கள், எச்சரிக்கைகளை மூன்று மொழிகளிலும் மொழிபெயர்த்தல் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்திட்டத்தின்படி சிகரெட் பக்கெற்றின் பெரிய பக்கத்தில் சுமார் 50 சதவீதமான பகுதியில் வர்ணத்தில் பட எச்சரிக்கைகள் பொறிக்கப்பட வேண்டும்.
இதுவரை அவுஸ்திரேலியா, பிரேஸில், கனடா, ஹொங்கொங், இந்தியா, மலேஷியா, தாய்லாந்து, தாய்வான், சிங்கப்பூர் ஆகியன உட்பட 15 இற்கும் மேற்பட்ட நாடுகள் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.