சிறகுவலையை பயன்படுத்துவோர் ஏனைய தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொள்க; எமிலியாம்பிள்ளை

சிறகுவலையை பயன்படுத்துவோர் ஏனைய தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொள்க; எமிலியாம்பிள்ளை

யாழ். மாவட்டத்தில் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிறகுவலைப் பயன்பாடு  தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடாத்தப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உபதலைவர் எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். 

கிராமிய அபிவிருத்தி கடற்றொழிலாளர் சம்மேளன அங்கத்தவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்றது. 

அதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.   அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக சிறகுவலைப்பயன்பாட்டினால் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதனால் அவர்களுடைய பொருளாதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே சிறகுவலை பயன்பாட்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி நாளை மறுதினம் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள், கடற்றொழில் சங்கங்களின் தலைவர்கள் , செயலாளர்களுக்கும் சமாசத்தினர் மற்றும் பாதுகாப்பு குழுக்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

அதன்போது சிறகுவலை பன்பாடு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும். எனினும் யுத்தகாலத்தில் குறித்த வலையினைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் மரக்கம்புகளையே பாவித்தனர். ஆனால் தற்போது இரும்புக்கம்பிகளைப் பயன்படுத்தியே மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கரைவலை தொழிலினை செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

அத்துடன் கரையில் இருந்து 25கிலோ மீற்றர் தூரத்திற்கு குறித்த வலையினை பயன்படுத்துவதால் பவளப்பாறைகளில் வாழும் மீன்கள் பிடிக்கப்படுவதும் கரையோரத்தில் மீன் இனப்பெருக்கமும் அழிந்து போகின்றது. அத்துடன் ஏனைய கடற்றொழிலாளர்கள் ஆழ்கடலில் தொழிலை மேற்கொள்வதிலும் சிரமங்களைச் சந்திக்கின்றனர். 

இதனால் எதிர்காலத்தில் மீன்களின் உற்பத்தியில் வீழ்ச்சியும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே பெரியளவிலான சிறகுவலைப்பாவிப்பினை விடுத்து அளவான வலைகளைப் பாவிக்குமாறும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்படவுள்ளது. 

அத்துடன் இதுகுறித்த யாப்பு ஒன்றினையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனையும் மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.