2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலகையே உலுக்கிய சுனாமி பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு அனைத்துப் பகுதியிலும் பெருமழைக்கு மத்தியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை மட்டுமல்ல சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட சுனாமியின் 8 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
இன்றைய நாளில் சர்வதேச ரீதியில் அஞ்சலி செலுத்தி அனுஷ்டித்து வருகின்றனர். இதன்படி இலங்கையிலும் பல்வேறு மாவட்டங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று சுனாமி அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் உறவினர்களால் நினைவு கூரப்பட்டனர்.
அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தொடக்கம் பெரியகல்லாறு வரையிலான சகல பகுதிகளிலும் சுனாமி அனர்த்தம் நினைவுகூரல்கள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு திருச்செந்தூர், புதுமுகத்துவாரம், நாவலடி ஆகிய பகுதிகளில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கடும் மழைக்கு மத்தியிலும் அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் இன்று காலை ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதேவேளை, அரச திணைக்களங்களில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் எனவும் இன்று முற்பகல் 9.25 மணிமுதல் 9.27 மணிவரையான காலப்பகுதியில் சகலரும் இதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
வவுனியா மாவட்டத்திலும் பூந்தோட்டம் பகுதில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
முல்லைத்தீல் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் உறவினர்கனால் இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் யாழ்.மாவட்டத்திலும் வடமராட்சி கிழக்கில் சுனாமியினால் உயிரிழந்த உறவுகளுக்கு கொட்டும் மழையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருவதுடன் மக்கள் உணர்வு பூர்வமாகவும் இன்றைய நாளையும் அனுஷ்டித்து வருகின்றனர்.