தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய , உறவுகளைத் தொலைத்த மக்கள் மீது, தாக்குதல் நடத்தியது மாபெரும் குற்றமாகும். இச் சம்பவம் உட்பட தமிழர்கள் மேல் புரியப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பிலும் சுயாதீன சர்வதேச விசாரணையை முன்னெடுக்க சர்வதேச நாடுகள் முன் வர வேண்டும். என்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
யாழில் பொது நூலகம் முன்பாக இன்று இடம்பெற்ற காணாமல் போனோரின் உறவுகளின் கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு நேரில் சம்பவங்களை அனுபவித்த நிலையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது பற்றிய அவரின் விபரிப்பு பின்வருமாறு...
கொழும்பிற்கு செல்கின்ற வேளையில் மதவாச்சியில் வைத்து பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மக்கள் இன்று யாழில் காலையில் அமைதியான முறையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த யாழ் முனியப்பர் கோயில் முன்றலில் ஒன்று கூடியிருந்தனர். அங்கு காணாமல் போன தங்களின் உறவுகளின் படங்களை வைத்து அவர்கள் ,தங்கள் வேதனையை வெளிப்படுத்தியமை காண்போர் எல்லாரையும் கண்ணீர் சிந்த வைத்தது. கணவனை இழந்த மனைவி, பிள்ளைகளை இழந்த பெற்றோர் , பெற்றோரை இழந்த பிள்ளைகள், சகோதரர்களை இழந்த பிள்ளைகள் என்று பலரின் அழுகுரலோடு அப்பகுதி பெரும் சோகமயமாக காணப்பட்டது.
இவ்வாறு அந்த உணர்வு வெளிப்படுத்தல் தொடர்கையில் பிற்பகல் 3 மணியளவில் .பிரித்தானிய பிரதமர் வருகிறார் என்று அறிந்தவுடன் நேரடியாக அவ்விடத்திலிருந்து சென்று துரையப்பா மைதானத்திற்கு அருகில் உள்ள வீதியோரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் உலங்கு வானூர்தியில் இருந்து இறங்கி , வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர்களை நோக்கி தங்கள் உறவுகளை மீட்டுத்தாருங்கள் என்று கதறியபடியே ஓடினார்கள். உறவுகளின் படங்களோடு அழுது கொண்டே சென்ற மக்களை அங்கிருந்த பொலிசார் பலவந்தமாக அப்புறப்படுத்தினர். இந்நிலையில் சிறிது நேரத்தின் பின் நூல் நிலையத்திற்குள் பிரதமர் இருக்கின்றார் என்பதை அறிந்து கொண்ட மக்கள் அங்கே உணர்ச்சிப்பெருக்கீட்டில் ஓடினர்.
தங்கள் உறவுகளுக்கு நீதி வேண்டுமென ஓடிய அந்த மக்களை ,பெருமளவில் அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிசார் கடுமையாக தாக்கினர். ஆரம்பத்தில் கைகளால் தாக்கிய பொலிசார் அதன் பின்னர் கால்களாலும் தாக்கினர். பிள்ளையைத் தொலைத்த தாயொருவர் சப்பாத்துக்காலால் தாக்கப்படுவதைக்கண்டு தடுக்க ஓடிய என்னை அவர்கள் கீழே தள்ளினர். ஒருவாறாக அத்தாயின் உயிருக்கு ஏதுமின்றி காப்பாற்றினோம்.
இப்படி பல சம்பவங்கள் அங்கே நடந்தன .ஒரு கட்டத்தில் மக்கள் பொலிசாரின் தடைகளையும் தாண்டி முன்னேறிச் சென்றனர். சக உறுப்பினர்கள் ஆனந்தி சசிதரன், கஜதீபன்,சயந்தன் ,சுகிர்தன் ,சிவாஜிலிங்கம் ,தியாகராசா ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் தமிழ்த்தேசிய முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் ஆகியோரும் மன்னார் பிரஜைகள் குழு தலைவர் வண.பிதா செபமாலை அடிகளார் அவர்களும் இந்த மக்கள் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர்.
இந்நிலையில் அங்கு வந்த சனல் 4 ஊடகவியலாளரிடம் அழுது புலம்பி தங்கள் மகஜர்களை மக்கள் ஒப்படைத்தனர்.மக்களின் அழுகுரல் அவ்வூடகவியலாரையே கண்ணீர் சிந்த வைத்தது.
உலகின் சக்தி மிக்க தலைவர் ஒருவர் முன்னிலையிலேயே இவ்வாறு தாம் தாக்கப்பட்டது எம் மக்கள் அனைவரையும் மாபெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் மோசமாக தாய்மார்கள் தாக்கப்பட்டமை மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றமாகும்.
இவ்வாறான நிலையில் இங்கே எவ்வாறு உள்ளகவிசாரணை நியாயமாக இருக்கும்? இச்சம்பவம் உட்பட இங்கு நடந்த அனைத்து குற்றங்களுக்கும் சுயாதீன சர்வதேச விசாரணையை முன்னெடுக்க சர்வதேசம் முன்வரவேண்டும்.