சைக்கிள் ஓட்டப் போட்டி விபத்தில் 12 பேர் காயம்

சைக்கிள் ஓட்டப் போட்டி விபத்தில் 12 பேர் காயம்

இலங்கை வான்படையின் 64வது வருடப்பூர்த்தியையொட்டி நடத்தப்பட்ட சைக்கிள் ஓட்டப்போட்டியில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சைக்கிள் ஓட்டப்போட்டி இம்முறை 14 ஆவது தடவையாகவும் இடம்பெற்றது.

சைக்கிள் ஓட்டப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று சனிக்கிழமை புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் போட்டியாளர்கள் 12 பேர் காயமடைந்துள்ளனர். 

இவர்களுள் நால்வர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

குறித்த பைசிகள் ஓட்டப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆரம்பமாகி தம்புள்ளையில் நேற்று முடிவுற்றது. 
பின்னர் இன்று காலை தம்புள்ளையில் ஆரம்பித்த இப் போட்டி புத்தளத்தில் முடிவுற்றது. புத்தளம் முடிவிடத்தை அண்மித்த வேளை போட்டியாளர் ஒருவர் தவறி வீழ்ந்த போது பின்னால் வந்த போட்டியாளர்களின் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வீழ்ந்ததிலேயே காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து போட்டியாளர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர். இப்போட்டியில் பொலிஸ், இராணுவம், வான்படை மற்றும் துறைமுக அதிகார சபையைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.