தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவரும் அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களாக செல்வதாக தகவல்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் சிங்களவர்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்வோரில் கடந்த காலங்களை விட  தற்போது அதிகளவான சிங்களவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்களே படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து வந்தனர்.
 
எனினும் தற்போது தமிழர் அல்லாதோரும் வடக்கு கிழக்கைச் சாராத தமிழர்களும் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து வருவதாக கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
இந்த மாத ஆரம்பம் முதல் இதுவரையில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 214 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 21 பேர் சிங்களவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
தங்களுக்கு படகில் செல்ல அனுமதி மறுத்தால் படகுப் பயணம் குறித்து அரசாங்க அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்வதாக அச்சுறுத்தி இந்தப் படகுகளில் சிங்களவர்கள் ஏறிக் கொள்வதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 
 
இது தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் கடற் பயணத்தின் போதும் கடற்படையினரால் பலர் கைது செய்யப்படுகின்றனர். 
 
எனினும் சட்டவிரோத இப் பயணங்களை அரசினால் நிறுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.