துப்பாக்கியுடன் சுற்றிய 14 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸார்

நியூயோர்க்கில் வீதியில் துப்பாக்கியுடன் சுற்றிய 14 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். 

நியூயோர்க் நகர பொலிசார் பிரான்க்ஸ் பகுதியில் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 3 அளவில் யாரோ துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. 

சத்தம் வந்த இடத்திற்கு பொலிசார் விரைந்து சென்று பார்த்தபோது கை துப்பாக்கியுடன் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். 

துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு, சரணடையும்படி பொலிசார் எச்சரித்தனர். எச்சரித்த பொலிசாரை நோக்கி சிறுவன் துப்பாக்கியால் குறி வைத்தான். 

தற்காப்பு முயற்சியாக பொலிசாரில் ஒருவர் தனது துப்பாக்கியால் சிறுவனை சுட்டார். 

தாடையில் குண்டு பாய்ந்த நிலையில் ஷாலிவர் டவ்ஸ் என்ற அந்த 14 வயது சிறுவன் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 

இதேவேளை, கடந்த மே மாதம் ஒரு வாலிபரை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் ஷாலிவர் டவ்ஸ் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.