வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்குத் தடையாக இருப்பவர்கள் யார் என்பது பற்றி பகிரங்கமாக விவாதிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (09) மல்லாவி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், அங்கு கூடிய வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுடனான சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக மாகாணசபை இருக்கின்ற நிலையில் அதன் செயற்பாடுகள் இன்று முடக்கப்பட்டுள்ளன.
அதனைக் கைப்பற்றியிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படக் கூடாது என்கின்ற தங்களது சுயலாப அரசியல் இருப்பை நோக்கமாகக் கொண்டு மாகாண சபையை செயற்படுத்தாமல் காலம் கடத்தி வருகின்றது.
இது எமது மக்களுக்கு இளைக்கின்ற மாபெரும் துரோகமாகும். மாகாண சபை செயற்பாடுகளுக்கு தடையாக அரசாங்கம் இருக்கின்றது என அவர்கள் கூறி வருகின்ற நிலையில் அதுபற்றி பகிரங்கமான ஒரு விவாதத்தை பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார்ந்தோர் முன்பாக நடத்துவதற்கு நாம் தயார் என்றும் அதில் கலந்து கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரா என்று வினவினார்.
மேலும் அரசாங்கத்துடனான சமரசப் போக்கினை முன்வைத்து எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியுமென தான் நம்புவதாகவும் இதுவே நடைமுறை சாத்தியமான யதார்த்த வழிமுறை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
த.தே.கூ.வுக்கு டக்ளஸ் தேவானந்தா சவால்
