வட மாகாண சபையால் உருவாக்கப்பட்ட 3 நியதிச் சட்டங்களில் மாற்றங்கள் செய்யுமாறு, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரை குறித்து, மாகாண சபையின் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியினருக்கிடையில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத் தொடர் (13 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்று வருகின்றது.
இதன்போது, வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டங்கள் (நிதி நியதிச் சட்டம், முதலமைச்சர் நியதிச்சட்டம், மற்றும் முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டம்) தொடர்பிலான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நியதிச் சட்டங்கள், வடமாகாண ஆளுநரின் சிபாரிசுக்கு அனுப்பியிருந்த வேளையில், மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவையில் இன்று குறிப்பிடும் போது, நியதிச் சட்டங்கள் ஆளுநரின் சிபாரிசுக்;கு அனுப்பவேண்டிய கட்டாயம் இல்லை. இருந்தும் நல்லெண்ண அடிப்படையில் நாங்கள் அனுப்பியிருந்தோம்.
இருந்தும் அவர் அதில் மாற்றங்கள் செய்யக்கூறியுள்ளார். ஆனால், இதில் கவனிக்கக்கூடியது என்னவெனில், வடமாகாண சபை நிதி நியதிச் சட்டத்தில் உள்ளடங்கியிருந்த சரத்துக்களே கிழக்கு மாகாண நிதி நியதிச் சட்டத்திலும் உள்ளடங்கியிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் எவ்வித மாற்றங்களும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், வடமாகாணத்துக்கு மட்டும் மாற்றங்கள் செய்யுமாறு கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது. இது பாகுபாடு காட்டுவதாக அமையும் என்று தெரிவித்தார்.
இதன்போது, கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, அவ்வாறு மாகாணங்களுக்கு பாகுபாடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தால், இதனை சட்டமா அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கலாம் என யோசனை முன்வைத்தார்.
எனினும், அதற்கு மறுப்புத் தெரிவித்த, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நீதிபதியாகவிருந்த எமது முதலமைச்சருக்கு சட்டம் பற்றி ஆளுநர் சொல்லும் போது, அந்தச் சட்டத்தின் மேல் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆகையால் நாங்கள் சட்டமாஅதிபர் திணைக்களத்தை நாடத் தேவையில்லை என்று தெரிவித்தார்.
நிதி நியதிச் சட்டங்கள் தொடர்பில் வடமாகாண சபையில் அமளி
