பத்மநாபாவின் 23ஆவது ஆண்டு நினைவு; வடக்கு, கிழக்கில் அனுஸ்டிப்பு

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்)யின் முன்னாள் செயலாளர் நாயகம் கே.பத்மநாபாவின் 23ஆவது நினைவு தினம் இன்று புதன்கிழமை, வடக்கு கிழக்கின் பல பிரதேசங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது. 

வடக்கில் யாழ்ப்பாணத்தில்  உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போராட்ட காலத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில்  புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தாத்தன், ஈழமக்கள் புரட்சிகர மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிறிதரன், ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பெற்றோர் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்திலும் இத்தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மா அணி தேசிய அமைப்பாளருமான இரா.துரைரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி சென்னையில் வைத்து பத்மநாபா மற்றும் அன்றைய வடகிழக்கு மாகாண நிதி அமைச்சர் கே.கிருபாகரன், மாகாண சபை உறுப்பினர் கமலன் மிஹ்லார், கே.யோகசங்கரி உட்பட மேலும் 9பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.