'பாடசாலைகளில் இராணுவம் தலையிடுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும்' என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் திங்கட்கிழமை (6) தெரிவித்தார்.
ஆசிரியர் தினத்தன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் 15 கோரிக்கைகளை முன்வைத்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று திங்கட்கிழமை (06) மேற்கொள்ளப்பட்டது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுகள் முறையாக வழங்கப்படவேண்டும். அதிபர் சேவையில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும், அதிபர் நியமனங்கள் ஒளிவு மறைவின்றி மேற்கொள்ளப்பட வேண்டும், அதி உயர் பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்டு மூடப்பட்டுள்ள பலாலி ஆசிரியர் கலாசாலை திறக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
இந்த கோரிக்கைகளை நாங்கள் மத்திய அரசாங்கத்திடமும் வடமாகாண அரசாங்கத்திடமும் முன்வைக்கின்றோம்.
ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் உரிமைகள் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளும்வரை எமது போராட்டங்கள் தொடரும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
'ஆசிரியர்களுக்கு 5 வருட 10 மாத கடன்களை வழங்கு', 'தமிழ் மொழியில் சுற்றறிக்கையை வழங்கு', 'அதிபர் நியமனங்களை வெளிப்படையாக வழங்கு', 'அதிபர் வெற்றிடங்களை வெளிப்படையாக வழங்கு' உள்ளிட்ட பதாகைகளை கைகளில் தாங்கியவாறு ஆர்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண சபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், அனந்தி சசிதரன், முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.