பாலஸ்தீன பிரதமர் திடீர் இராஜினாமா : ஜனாதிபதியை மிரட்டும் திட்டமா?

பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தல்லா தனது பதவியை நேற்று திடீரென இராஜினாமா செய்துள்ளார். 

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக முன்னாள் பிரதமர் சலாம் பயாத் முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்தார். 

இதனையடுத்து, அரசியலுக்கு சற்றும் தொடர்பே இல்லாத ரமி ஹம்தல்லாவை புதிய பிரதமராக, ஜனாதிபதி கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நியமித்தார். 

அவருக்கு துணையாக மேலும் இரண்டு துணை பிரதமர்களும் நியமிக்கப்பட்டனர். 

பாலஸ்தீன அரசியலமைப்பு சட்டங்களின்படி, பிரதமரை விட ஜனாதிபதியிடம் தான், அதிகமான அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. 

அதுமட்டுமின்றி, துணை பிரதமர்களின் அனுமதி பெற்றே எந்த முடிவையும் பிரதமர் எடுக்க முடியும் என்ற முட்டுக்கட்டையும் உள்ளதால் ரமி ஹம்தல்லாவால் தன்னிச்சையாக செயலாற்ற முடியவில்லை. 

இந்நிலையில், தனது பதவியை ரமி ஹம்தல்லா நேற்று திடீரென இராஜினாமா செய்தார். 

ஜனாதிபதியை மிரட்டி அதிக அதிகாரங்களை பெறும் நோக்கத்தில் பிரதமர் இராஜினாமா நாடகம் ஆடுவதாக உள்ளூர் ஊடகங்கள் விமர்சித்துள்ளன. 

அவரது இராஜினாமா ஏற்கப்பட்டதா? அல்லது, நிராகரிக்கப்படுமா? என்பது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.