போலி புதையல் பண மோசடி வழக்கில் பிணையில் வெளியில் வந்த நபரை, திருட்டு குற்றச்சாட்டில் மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்த சம்பவம், வெள்ளிக்கிழமை(17) யாழ். நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
போலி தங்கப்புதையல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர், நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியில் வந்தார்.
இதன்போது, இவர் தான் எனது பணத்தையும் திருடிச்சென்றவர் என நீதிமன்ற வளாகத்திற்குள் நின்றிருந்த ஒருவர் கூச்சலிட்டுள்ளார்.
இதனையடுத்து, பிணையில் வெளியில் வந்த நபரை கைது செய்த பொலிஸார், கூச்சலிட்ட நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, கூச்சலிட்ட நபர், தான் ஒரு ஒப்பந்தக்காரர் எனவும், தனக்கு வாகனம் ஒன்றை வாங்கி தருவதாக கூறி மேற்படி நபர் தன்னுடன் நண்பன் ஆகியதாகவும் கூறினார்
யாழ்ப்பாணத்திலுள்ள வங்கியொன்றில் 4 இலட்சம் ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு செல்கையில் தன்னுடன் மேற்படி நபர் வந்தததாகவும், இடையில் மோட்டார் சைக்கிள் நின்றுவிட்டதால் அதனை தான் சரிபார்ப்பதற்காக இறங்கிய வேளையில் பின்னால் இருந்து தன்னுடைய பணத்தை திருடிக்கொண்டு ஓடிவிட்டதாகவும் கூறினார்.
தற்போது நீதிமன்றத்திற்கு வேறு ஒரு அலுவல் காரணமாக வந்திருந்தவேளை இந்நபரை அடையாளங்கண்டு கொண்டதாகவும் கூறினார்.
இதனையடுத்து, பிணையில் வந்த நபரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நபர், தங்கப்புதையல் பண மோசடியில் ஈடுபட்ட நால்வரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.