வெளி நாட்டில் வேலை வாங்கிதருவதாக கூறி வடக்கைச்சேரந்த 150 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
புருணை நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரலாம் எனக் கூறிய வேலை வாய்ப்பு முகவர் ஒருவரை நம்பியே இவர்கள் பெருந்தொகையான பணத்தை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தலா ஐம்பதினாயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் முகவருக்கு கட்டியதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகப் இவ்வாறு பணம் செலுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
வவுனியா ஈரப்பெரியகுளத்தில் உள்ள விருந்தினர் விடுதியொன்றிற்கு திங்கட்கிழமை நடக்கும் நேர் முகப் பரீட்சைக்கு வருமாறும் அங்குவைத்து விசாவை தருவதாகவும் முகவர் தெரிவித்துள்ளார்.
அதனை நம்பி இளைஞர்கள் நேற்றுக்காலையிலே குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர். காலையிலிருந்து மதியம் வரை அவர்கள் காத்திருந்த போதிலும் நேர்முக பரீட்சைக்கான ஏற்பாடுகள் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை.
இதனையடுத்து தாம் பணம்செலுத்தி மதவாச்சியிலுள்ள அலுவலகத்திற்கு சென்று விசாரித்துள்ளனர். அங்கு உரிய பதிலெதுவும் அளிக்கப்படவில்லை.
சந்தேகம் கொண்ட இளைஞர்கள் முகவர்களுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டிருந்துள்ளது.
இதனையடுத்தே தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்துக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்றிருந்த போதிலும் மதவாச்சியில் பணம் கட்டியபடியால், அந்த பொலிஸ் நிலையத்தில் சென்ற முறையிடுமாறு பொலிஸார் தெரிவித்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்