யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தினது மேம்பாட்டையும், அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சபையும், யாழ்.மாநகர சபையும் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் (10) இடம்பெற்ற குறித்த விடயம் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், பிரதான பேருந்து நிலையமாக யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் இருப்பதனால் அதனை சுத்தம் சுகாதாரமாக பேணிப் பாதுகாப்பது அவசியமானதாகும்.
எனவே, ஒவ்வொரு நாளும் குறித்த நிலையம் சுத்தம் செய்யப்படும் அதேவேளை, அதனை அழகுற வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே வடபிராந்திய போக்குவரத்து சபைக்குச் சொந்தமான தரிப்பிடத்தைச் சூழ சுற்றுமதில் அமைப்பது குறித்து கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள், அது தொடர்பில் நேரில் ஆராய்ந்து முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்ததுடன், திட்டமிடப்பட்டுள்ளதான தரிப்பிடத்தின் மாதிரி வரைபடத்தை பார்வையிட்டு அதுதொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன், பேருந்து தரிப்பிடப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களின் ஊடாக பெறப்படும் வாடகை பணத்தை 50 வீதம் வடபிராந்திய போக்குவரத்து சபையும், 50 வீதம் யாழ்.மாநகர சபையும் சமபங்காக பிரிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதுடன், பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் இரு சபைகளும் மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இதன்போது இ.போ.சபையின் வடபிராந்திய பிரதான பொதுமுகாமையாளர் அஸ்ஹர், யாழ்ப்பாணம் சாலை முகாமையாளர் குலபாலசெல்வம், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.மாநகர ஆணையாளர் பிரணவநாதன், ஆகியோர் உடனிருந்தனர்.