மனைவியைக் கொன்று, அவரது சடலத்தை புகைப்படங்களாக பேஸ்புக்கில் வெளியிட்ட அமெரிக்கக் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தைச் சேர்ந்தவர் 31 வயது டெரக் மெடினா. இவரது மனைவி ஜெனிபர் அல்போன்சா, வயது 26. இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
டெரக் தனது மனைவியைக் கொன்று அவரது புகைப்படங்களை பேஸ்புக்கில் போட்டுள்ளார். கூடவே, பேஸ்புக் நண்பர்களுக்கு செய்தியும் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘விரைவில் என்னை செய்திகளில் பார்க்கலாம். நான் என் மனைவியைக் கொன்று விட்டேன். இதற்காக சிறைக்குச் செல்கிறேன். உங்களை எல்லாம் மிகவும் மிஸ் செய்வேன்´ என உருக்கத்தைப் பொழிந்ததோடு, மனைவியின் சடலப் போட்டோக்களையும் அத்தோடு இணைத்துள்ளார்.
அதில், இரத்த வெள்ளத்தில் ஜெனிபர் பிணமாகக் கிடக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மனைவியை சுட்டுக் கொன்ற போட்டோக்களை பேஸ்புக்கில் அப்லோட் செய்த கையோடு சமத்துப்பிள்ளையாக மியாமி பொலிஸ் ஸ்டேஷனில் போய் சரண்டர் ஆகி விட்டார் டெரக். டெரக் எதற்காக தனது மனைவியைக் கொலை செய்தார் என்ற காரணம் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
அது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெரக்கின் தந்தை இது குறித்து போலீசாரிடம் கூறுகையில், ‘தனது மகன் குடும்ப சண்டை காரணமாக மனைவியை இவ்வாறு கொடூரமாகக் கொன்றிருக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.