மன்னம்பிட்டிப் பகுதியில் முஸ்லிம் பெண்ணொருவரின் பர்தாவை இனந்தெரியாத குழுவொன்று திங்கட்கிழமை காலை அகற்ற முயற்சித்துள்ளது. மன்னம்பிட்டி தபால் நிலையத்தில் தபால் அதிபராகப் பணி புரியும் பெண்ணின் பர்தாவையே இந்தக் குழு அபகரிக்க முயற்சித்துள்ளது.
கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள தபாலகத்திற்கு இவர் நடந்து செல்லும்போதே மன்னம்பிட்டி பிரதான வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்தமையினால் இந்தப் பெண்ணினால் அந்தக் குழுவினரை இனங்காண முடியாது போயுள்ளது.
மன்னம்பிட்டி தபால் நிலைய அதிபராக கடந்த பெப்ரவரி மாதம் இந்த பெண் நியமனம் பெற்றிருந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இவர் வேலை முடிந்து திரும்பும்போது ஒரு குழுவினரால் பர்தாவை கழற்றுமாறு இந்தப் பெண் மிரட்டப்பட்டுள்ளார். எனினும் இதனை அவர் கவனத்திற்கு கொள்ளவில்லை. இதனையடுத்தே நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மன்னம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இந்தப் பெண்ணினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிழக்கு மாகாண தபால் மா அதிபரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
மன்னம்பிட்டியில் முஸ்லிம் பெண்ணின் பர்தாவை அகற்றுவதற்கு முயற்சி