வடமாகாண சபை தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டமும் வேட்பாளர் அறிமுக விழாவும் மன்னார் பொது விளையாட்டரங்கில் நேற்று மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
வடமாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட ரீதியில் தமது பிரச்சாரத்தையும் வேட்பாளர் அறிமுக விழாவினையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய 3 மாவட்டங்களிலும் பெரும் எடுப்பில் மக்களுடைய ஆதரவுடன் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு ஆயிரக்கணக்கிலான மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர். இந்த கூட்டத்திற்கு முன்பதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
அத்துடன் மன்னார் ஆயருடனான இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ சுமந்திரன், யோகேஸ்வரன், அரியநேந்திரன் மற்றும் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட எட்டு வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். இதனையடுத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன், பி.அரியநேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா, வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்வில் அச்சத்தை விடுத்து துணிவுடன் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் தமது ஆதரவையும் தெரிவித்திருந்தனர்.