மன்னாரில் மதுக்கடைக்கு எதிராக பொங்கி எழுந்த மக்கள்

மன்னார் பெரியக்கடை கிராமத்தில் மக்கள் குடியிருப்பிற்கு அருகாமையில் தனியார் ஒருவருடைய வீட்டில் தற்போது அமைக்கப்பட்டு வரும் மது விற்பனை நிலையத்தை உடனடியாக அகற்றக்கோரி பெரியக்கடை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கமும், பெரிய கடை கிராம மக்களும் இணைந்து இன்று (18) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் எதிர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டனர். 

இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் பெரியகடை உப்பள பிரதான வீதியில் ஒன்று கூடிய கிராம மக்கள் குறித்த மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை ஆரம்பித்து பெரிய கடை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மது விற்பனை நிலையத்தினூடாக ஊர்வலமாக சென்று மன்னார் நகர சபையை சென்றடைந்தனர். 

பின் தமது பிரச்சினைகளை தெரிவித்தனர். மன்னார் பெரியக்கடை கிராமத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் மது விற்பனை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. 

பெரியகடை கிராமம் பிரதான இடத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த எவரும் குறித்த மதுபான சாலையை அமைக்க அனுமதி வழங்கவில்லை. 

நீர் வடிகாலமைப்பு மற்றும் சமூர்த்தி உதவித்திட்டம் ஆகியவற்றிற்கு இக்கிராம மக்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கையொப்பங்களை தவரான முறையில் பயன்படுத்தி இக்கிராம மக்களும் ஆதரவு வழங்குவதாக கோரி குறித்த மது விற்பனை நிலையத்தினை அமைத்து வருகின்றனர். 

இவ்விடத்தில் அமைப்பது மது விற்பனை நிலையம் என்று ஒரு சில வராங்களுக்கு முன்புதான் இக்கிராம மக்களுக்கு தெரிய வந்தது. 

இந்த நிலையிலே இக்கிராம மக்கள் அனைவரும் இணைந்து எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டோம் என அந்த மக்கள் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் ஆயோரிடம் மகஜரை கையளித்தனர். 

இதனைத் தொடர்ந்து குறித்த மக்கள் பேரணியாக சென்று மன்னார் பிரதேசச் செயலக அதிகாரிகளிடம் மகஜரை கையளித்தனர். 

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை, உட்பட அக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.