யாழ்ப்பாணம் காரைநகர் தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்கள் மூவர் இணைந்து அதே பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியதில் அந்த மாணவன் கண்ணில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மேற்படி பாடசாலையில் கல்வி கற்கும் காரைநகர் இலகடியைச் சேர்ந்த பரமேஸ்வரன் பிரதீபன் (வயது-17) என்ற மாணவனே கண்ணில் காயமடைந்தவராவார்.
குறித்த பாடசாலையின் மலசலகூடத்தில் ஒரு மாணவனதும் மாணவியினதும் பெயர்கள் இணைத்து எழுதப்பட்டிருந்ததாகவும் இதனை எழுதியது மேற்படி மாணவனே என்று கருதியே அவர் மீது உயர்தர மாணவர்கள் மூவர் இணைந்து கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அவரின் அலறல் கேட்டு ஆசிரியை ஒருவர் ஓடி வந்து தடுத்ததாகவும் அதனையும் பொருட்படுத்தாமல் மேற்படி மாணவர்கள் மூவரும் இணைந்து குறித்த மாணவனைக் கடுமையாகத் தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
இந்த தாக்குதலால் கண்ணில் காயமடைந்த மாணவனை பாடசாலை அதிபர் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் அங்கு வைத்தியர் இல்லாத காரணத்தால் அந்த மாணவன் பிற்பகல் 2 மணியளவிலேயே சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
காயமடைந்த மாணவன் பாடசாலை முடிவடைந்த பின்னர் வீட்டுக்குச் சென்ற நிலையில் மறுநாளான வியாழக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவனிடம் வைத்தியசாலைப் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த விடயத்தை ஊர்காவற்றுறை காவல்துறை நிலையத்தில் பாரப்படுத்துவதற்கும் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.