முதற்கட்ட தேடுதலில் உடல் எச்சங்கள் எவையும் கிடைக்கவில்லை

லயன் எயர் விமானத்தில் பயணம் செய்த 31 பயணிகளது உடல் எச்சங்களை, பூநகரி கடற்கரையில் தேடும் நடவடிக்கைகயின் போது மனித உடலோ, உடற் பாகங்களோ எதுவும் கிடைக்கப் பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

1998ம் ஆண்டு செப்ரெம்பர் 29ம் திகதி பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கி 48 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட லயன் எயர் விமானம் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடல்கள் விடுதலைப் புலிகளால் பூநகரி கடற்கரையோரத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இதன்பின்னதாக நேற்று (09) கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் சடலங்களை தேடும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

எனினும் நேற்று மாலைவரை சடலங்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாரிய இயந்திரங்களைக் கொண்டு சடலங்களை தேடும் நடவடிக்கைகள் இன்று (10) ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் மெலும் தெரிவித்தனர்.