முல்லைத்தீவு கரையோர பகுதிகளில் கடும் காற்று;படகுகள், வலைகளை காணவில்லை

முல்லைத்தீவு பகுதியின் கரையோரத்தை ஊடறுத்து வீசிய கடும்  காற்றினால் 5 படகுகளும் 21 மீன்பிடி வலைகளும் காணாமல் போயுள்ளன.

சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வீசிய கடும் காற்றினால் 7 இயந்திரங்களும் காணாமல்போயுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் வேத நாயகம் குறிப்பிட்டார். 

கள்ளப்பாடு, தீர்த்தக்கரை , செல்வபுரம் மற்றும் அலம்பில் பகுதி மீனவர்களே பாதிக்கப்பட்டதாகவும் காற்றினால் 7 படகுகளும், 11 மீன் பிடி இயந்திரங்களும் சேதமடைந்துள்ளதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடல் பகுதிகளில் கடும் காற்று மற்றும் கனமழை குறித்தான அடுத்த 24 மணித்தியாலத்துக்கான கால நிலை அறிவுறுத்தலை வளிமணிடலவியல் திணைக்களம் நேற்று சனிக்கிழமை காலை  6 மணிக்கு விடுத்துள்ளது. 

யாழ்ப்பாணத்துக்கு வட , கிழக்காக 1100 கிலோ மீற்றர் தூரத்தில் பைலின் சூறாவளி சனிக்கிழமை காலை நிலை  கொண்டிருந்த நிலையில் சனிக்கிழமை இரவு இந்தியாவின் கிழக்கு கரையை தொடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் இல்லையெனினும்  நாட்டின் கரையோர கடல் பகுதிகளில் நேரத்துக்கு நேரம் கடும் காற்று வீசும் அதேநேரம் நாட்டின் பல பகுதிகளிலும் காற்று வீச இடமுண்டு. குறிப்பாக மத்திய மலை நாடு மற்றும் மேற்கு சரிவுகளில் காற்றுவீச சாத்தியமுண்டு என குறிப்பிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம் யாழ்ப்பாணம் முதல் அம்பாந்தோட்டை வரையான கொழும்பு மற்றும் காலியூடான கடற்கரை பகுதி மற்றும் கடல் பகுதியில் 30 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்  காற்று மணிக்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்குமென அறிவுறுத்தியுள்ளது. 

இதனால் கடல் பகுதி கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும் காணப்படும். நாட்டினை சுற்றியுள்ள ஏனைய  கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படுமெனவும் காற்று மணிக்கு 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசுமெனவும் குறிப்பிட்டுள்ளது. 

இது இவ்வாறிருக்க கடந்த வியாழன் பெய்த கடும் மழையினால் பொத்துவில் பகுதியில் 373 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.