யாழ்,கே.கே.எஸ் பகுதியில் 176பேர் கைது; ஏ.எஸ்.பி

யாழ்,கே.கே.எஸ் பகுதியில் 176பேர் கைது; ஏ.எஸ்.பி

யாழ்ப்பாணம்  மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 176பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்.பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால் பெரேரா தெரிவித்தார். 

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு செய்தி தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் பாரிய குற்றங்களைத் தடுக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 176  பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

 அதன்படி யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தடியால் அடித்து காயப்படுத்தியமை தொடர்பில் 4 பேரும், குடித்து விட்டு வாகனம் செலுத்தியமை தொடர்பில் 13 பேரும், அடித்துக்காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் 22 பேரும், அத்து மீறிவீட்டினுள் நுழைந்த 02 பேரும், சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட 4பேரும், பொதுஇடத்தில் வைத்து மதுவருந்திய 4 பேரும், நட்டம் ஏற்படுத்திய 4பேரும், சந்தேகத்தில் 14பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 19 பேரும், வீதிவிபத்துக் குற்றச்சாட்டில் 2பேரும்,  கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் ஒருவரும் ,  குடித்து விட்டு கலகம் விளைவித்த 4பேரும், களவு தொடர்பில் 7பேரும், கூரிய ஆயுதம் வைத்திருந்த 11 பேரும் சிறுகாயங்கள் ஏற்படுத்தியமை தொடர்பில் 2 பேரும் என 118  பேர் கைது செய்யப்பட்டனர். 

மேலும் பாரிய குற்றங்கள்  தொடர்பில் 5பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5பேரும், சந்தேகத்தின் பேரில் 10 பேரும் மற்றும் ஏனைய குற்றங்களுக்காக 38 பேரும் என 58பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.