ராஜஸ்தானிடம் சரணடைந்தது மும்பை இந்தியன்ஸ்

5-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நேற்று ஆரம்பமானது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

‘ஏ’ பிரிவில் லயன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஒட்டாகோ, பெர்த் ஸ்கார்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் பிரிஸ்பேன் ஹீட், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், டைட்டன்ஸ், டிரினிடாட் அண்ட் டொபாக்கோ ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். 

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் ஐ.பி.எல். சாம்பியன் மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்தின. 

நாணயசுழற்சியில் வெற்றியீட்டிய ராஜஸ்தான் அணித் தலைவர் டிராவிட் முதலில் மும்பை அணியை துடுப்பெடுத்தாட பணித்தார். 

இதன்படி வெய்ன் சுமித்தும், சச்சின் டெண்டுல்கரும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சுமித் 9 ஓட்டங்களுடனும் டெண்டுல்கர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 

தினேஷ் கார்த்திக்கும் (2) அம்பத்தி ராயுடும் (3) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 

முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 53 ஓட்டங்களை எடுத்து மும்பை தடுமாறியது. பின்னர் தலைவர் ரோகித் ஷர்மாவும், கீரன் பொல்லார்ட்டும் கணிசமான பங்களிப்பை அளித்தனர். 

ரோகித் ஷர்மா 44 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பொல்லார்ட் 42 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விக்ரம்ஜீத் மாலிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அடுத்து 143 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தலைவர் டிராவிட் (1) ஏமாற்றத்தை அளித்தார். 

இதன் பின்னர் ரஹானேவும் (33), விக்கெட் காப்பாளர் சாம்சனும் (54) அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆட்டம் பரபரப்பான கட்டத்தை அடைந்தது. 

ஷேன் வாட்சனும்(27), ஸ்டூவர்ட் பின்னியும் (27) அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

பின்னி சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 148 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.