கமல் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம்’ படம் வருகிற 25-ந்தேதி ரிலீசாகிறது. பிப்ரவரி 2-ந்தேதி டி.டி.எச்.களில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹாலிவுட்டுக்கும் படம் போகிறது.
இதுகுறித்து கமலஹாசன் அளிதத பேட்டி வருமாறு:-
‘விஸ்வரூபம்’ படத்தின் சிறப்பு காட்சி வருகிற 24-ந்தேதி லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் திரையிடப்படுகிறது. ஹாலிவுட் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தை பார்க்கின்றனர். இதற்காக நான் லாஸ்ஏஞ்சல்ஸ் புறப்பட்டு செல்கிறேன்.
என்னுடன் ‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்த இதர நடிகர், நடிகைகள் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து வரும்படி கூறியுள்ளனர். எனவே அவர்களும் வருகிறார்கள். ஹாலிவுட் நடிகர்களுக்கு ‘விஸ்வரூபம்’ படம் காட்டப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
டி.டி.எச்.சில் படத்தை ஒளிபரப்புவது என்பது புதிய முயற்சி. திருட்டு வி.சி.டி. மூலம் 50 சதவீதம் பணம் திருடப்படுகிறது. திருடர்களுக்கு பயம் இல்லை. நாம் அவர்களை திருடன் என்று சொன்னால் ஓடாமல் தைரியமாக நின்று திரும்பி பார்க்கிற சூழ்நிலைதான் தற்போது உள்ளது. திருடர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது மோசமான செயல் ஆகும்.
திருடன் எடுக்கும் பணத்தை பற்றி இங்கே கவலைப்படுவது இல்லை. ஆனால் பொருளுக்கு சொந்தக்காரன் தனக்கு சேரவேண்டிய ஒரு சதவீதம் பணத்தை எடுத்தால் பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள்.
டி.டி.எச். பிரச்சினையில் யார் ஜெயித்தார். யார் தோற்றார் என்பது பிரச்சினை இல்லை. டி.டி.எச்.சில் ஒளிபரப்பும் முயற்சி வெற்றி பெற்றால் புதிய பாதையை திறந்து வைத்தது போல் ஆகும். இதன் மூலம் மேலும் சிறப்பான படங்கள் வெளிவரும். கட்டுப்பாடுகள் தகர்க்கப்படும். டி.டி.எச்.சில் ஒளிபரப்பான முதல் தமிழ் படம் ‘விஸ்வரூபம்’ என்ற பெயர் எடுக்க விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுகிறேன்.
இவ்வாறு கமலஹாசன் கூறினார்.