வறுமையின் காரணமாக வயோதிபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த ஆறுபிள்ளை கணபதிப்பிள்ளை (வயது 88) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. சுகதேகியாக இருந்தபோதிலும் இவர் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இவரின் மூத்த மகனுக்கு புற்றுநோய்த் தாக்கம் ஏற்பட்டதையடுத்து அவரது சிகிச்சைக்கு பெரும்தொகைப் பணம் தேவைப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு போதிய பணம் கிடைக்காத நிலையில் தனது மகன்படும் சிரமத்தை பார்க்கப்பொறுக்காத தந்தை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை புரிந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இவரது இல்லத்திற்குச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மரண விசாரணையை மேற்கொண்டு சடலத்தை உறவினரிடம் ஒப்படைத்தார்.