ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதையை நவீன முறையில் மீள்கட்டமைப்பதற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றது.
இலங்கையில் பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் ஏற்றுமதிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளும், புகையிரதப் பாதைகளும் பல தசாப்த காலமாக புனரமைப்பு செய்யப்பட்டு பாவனைக்குட்படுத்தப்பட்டு வந்ததே தவிர அவை மாற்றியமைக்கப்படவில்லை.
போர்க்காலத்தில் அழிந்துபோன இவற்றை மீளமைப்புச் செய்யும்போது, இருந்ததை அப்படியே மறுபடி ஆக்காமல், நவீன முறையில் புகையிரதப்பாதை மீள் கட்டமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
முன்னர் வளைவுகளாக இருந்த தண்டவா இப்போது ஒரே நேராக அமைக்கப்பட்டு புகையிரதம் வேகமாகப் பயணிக்கக்கூடிய நிலையில் புகையிரதப்பாதை அமைக்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி, தண்டவாளைங்களைத் தனித்தனித் துண்டுகளாக ஆணிகளால் பொருத்தாமல், அதியுயர் மின் அழுத்தத்தின் மூலம் அவை உருக்கி ஒட்டப்படுகின்றன.
இந்தியாவின் தனியார் எந்திரவியல் நிறுவனதால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தப் பணிகள் தற்போது ஆனையிறவுப் பகுதியில் நடைபெற்று வருகின்றது.
தண்டவாளங்களை நேராக ஒட்டிப் பொருத்தும் பணிகளுக்கு வீதியிலும் தண்டவாளத்திலும் பயணிக்கக்கூடிய விஷேட மின் பொறியியல் இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.
“வேறு உலோகங்களைப் பயன்படுத்தி நாங்கள தண்டவாளங்களை ஒட்டவில்லை, உயர் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தி, தண்டவாளங்களையே உருக்கி ஒன்றுடன் ஒன்று ஒட்டப்படுகின்றன” என இந்தியப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கூறினார்.
தண்டவாளங்கள் பொருத்தும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருவதாகவும், யாழ்.கோண்டாவில் பகுதியில் இந்தப் பணிகளில் ஒரு பகுதி ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அடுத்தகட்டமாக ஓமந்தையிலிருந்து தண்டவாளம் பொருத்தும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாகவும், தண்டவாளங்களை உருக்கி ஒட்டப் பயன்படுத்தப்படும் விசேட பொறியியல் இயந்திரம் தண்டவாளத்தில் ஓடியவாறே அவற்றை ஒன்றுடன் ஒன்று ஒட்டிபடி முன்னோக்கி நகரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆக, 1990க்குப் பின், 23 வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்துக்குப் புகையிரதம் வரும்போது, நேரான புகையிரதப்பாதையில் அதிவேகமாக அது கூவியபடி வரப்போகிறது.
இதனால், கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான போக்குவரத்துக்கான நேரம் மேலும் சுருங்குவதால், பயணிகளுக்கு இது மேலும் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.